Wednesday, October 30, 2013

பார்வையற்றோர் வெற்றி பெற முடியாதா? - பார்வையற்ற மாற்றுத்திறனாளி திரு. சுப்பிரமணியம்






'Orbit' Subramaniyam

பார்வையற்றவராய் இருப்பினும் வாழ்வில் வெற்றியடைய முடியுமென நிருபித்து, பார்வையற்ற பலருக்கும் பயிற்சி அளித்து, வேலை வழங்கி, தலை நிமிர செய்துக் கொண்டிருக்கிறார், திருச்சியிலுள்ள 'ஆர்பிட்' நிறுவனத்தின் செயலாளராக இருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி  திரு. சுப்பிரமணியம்.

பார்வை இழந்தால், வாழ்க்கையே இருண்டு விட்டதென இடிந்து போய் முடங்கி விடாமல், தன்னம்பிக்கை ஊட்டி, மற்ற சாதாரண மனிதர்களைப்போல, தங்கள் சொந்த காலில் நிற்பதற்கு, 1973ல் "ஆர்பிட்"   துவக்கப்பட்டது.

தொடக்கத்தில் ஐந்து (5) பார்வையற்றவர்கள் மூலம், 'சாக்பீஸ்' 'சோப்பு' போன்ற எளிய பொருட்களை மட்டுமே தயாரித்து விற்றோம். பார்வையற்றவர்களால் சரியாக தயாரிக்க முடியாதென எந்த நிறுவனமும் ''ஆடர்களை'' எங்களுக்கு வழங்கவில்லை.

ஆனால், எங்கள் திறமையை உணர்ந்த, திருச்சி  ''பெல்'' நிறுவனம் , கனரக பொருட்களுக்கான ஆடர்களைத் தந்தது. கொடுத்த ஆடர்களை சரியாக முடித்துக் கொடுத்ததால், ஆடர்கள் குவிய ஆரம்பித்தன. 

இதனால், 100 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை தரும் அளவுக்கு வளர்ந்துள்ளோம்.முறையாக பயிற்சிக் கொடுக்கப்பட்டதால், பார்வை உள்ளவர்களை விட, 20 சதவீதம் அதிக திறனுடன் உழைக்க முடிகிறது. காரணம், பார்வையற்றவர்கள் வேடிக்கைப் பார்க்காமல்,  கவன சிதறல் இல்லாமல் பணியாற்ற முடிகிறது.

எங்களது அயராத உழைப்பால், கடந்த 2012ல் ராணிப்பேட்டையிலும் புதிதாக கிளை நிறுவி, 25 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளோம். 

2001 மற்றும் 2009ம் ஆண்டிற்கான "சிறந்த தனியார் நிறுவனம்" என்ற விருதினை தமிழக அரசிடம் பெற்றுள்ளோம். 2010ல் உடல் ஊனமுற்றோர் தினத்தன்று, ''சிறந்த நிறுவனம்'' என்ற விருதை ஜனாதிபதியிடமிருந்து பெற்றோம். தைவானில், 2012ம் ஆண்டு, 23 நாடுகள் பங்கேற்ற 'வொர்க்கபிலிட்டி ஆசியா' மாநாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கும், 200 நிறுவனங்கள் பங்கேற்றதில், எங்கள் நிறுவனம் சிறந்த நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாராட்டப்பெற்றோம்.

தன்னம்பிக்கையுடைய பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக திகழ்வதுடன், மற்ற பார்வையற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து, பயிற்சி கொடுத்து, வளர்ந்தது விடும் அவரையும், அவர் நிறுவனத்தையும், மென்மேலும் வளர்ந்து சிறப்படைய வாழ்த்துவோம் நண்பர்களே.  

Thursday, October 24, 2013

குளுமையாக இருக்கிறது

வாவ்.... இங்கு இப்போது காற்று வீசாமல் மழை பெய்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு இருபது நிமிடம் காரில் கூட பயணிக்க முடியாத அளவு பலத்த மழை. ஒரு கார் தொடர்ந்து செல்லமுடியாமல் எங்கள் வீட்டருகே நிறுத்தி வைத்து, மழை குறைந்தபின் இப்பொழுதுதான் செல்கிறார்கள். குளுமையாக இருக்கிறது. இனிய மாலை வணக்கம் நட்புகளே.

Friday, October 18, 2013

பாரத நாட்டியத்தில் முஸ்லிம் பெண்- பாகிஸ்தானில் அரங்கேற்றம்

.

தாலிபான் பயங்கரவாத அமைப்பு, கலைகளுக்கு தடை விதித்ததால், அச்சத்தின் காரணமாக, பெரும்பாலான பாகிஸ்தானிய மக்கள், கலைகளை கற்றுக் கொள்வதிலிருந்து ஒதுங்கியே இருக்கின்றனர்.
அம்னா மவாஸ் என்னும் இளம் பெண் வீட்டுக்கருகே, இந்தியாவை சேர்ந்த இந்துசட்டர்ஜி   என்பவர், பாகிஸ்தானிய ராணுவ அதிகாரியை திருமணம் செய்துக் கொண்டு சுமார் 15 வருடங்களுக்கு முன்  குடியேறினார். அவர் பரத நாட்டியம் அறிந்தவர். ஆதலால் அவரிடம் அம்னா மவாஸ் பரத நாட்டியம் கற்றுக் கொள்ள விரும்பி 20 பேர் கொண்ட பெண்கள் குழுவுடன் பரத நாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.

அம்னா மவாஸ் மட்டுமே முறையாக பரத நாட்டியத்தை கற்க, மற்றவர்கள், இடையிலேயே தங்கள் வீட்டிற்கும், சமுதாயத்திற்கும் பயந்து நின்று விட்டனர். இந்நிலையில் பல தடைகளையும், சர்ச்சைகளையும்  கடந்து, கணவரின் ஆதரவுடன் 14 ஆண்டுகளாக பரதத்தை விடாமல் கற்று, இஸ்லாமாபாத்தில் உள்ள குச் காஸ் என்ற இடத்தில் "எல்லோருக்கும் பாகிஸ்தான்" என்ற தலைப்பில் பாரத நாட்டியத்தை அரங்கேற்றியுள்ளார்.

இதற்கு அம்னா மவாஸ் குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், கணவர் வாக்கஸ் காலித்தின் ஒத்துழைப்பால், பாகிஸ்தானின் முன்னணி பாடகர் தைமூர் ரஹ்மான் இன்னிசை பாட, அம்னா மவாஸ் நடன மாட, ஹிந்துஸ்தானி ராகத்தில் பரதத்தை ஒலிக்கவும், ஒளிரவும் செய்துள்ளார். அதைக் கண்ட பாகிஸ்தானிய மக்கள் பிரமிப்பில் ஆழ்ந்து அனுபவித்தனர்.

** கல்வி புரட்சி பெண் மலாலாவுக்கு ஏற்பட்ட நிலை, இவருக்கும் வந்து விடக் கூடாது என பிரார்த்தித்துக் கொள்வோம்.  

வாழை தோப்பை காக்க..., வாழ்த்துவோம் நண்பர்களே!,



வாழை சாகுபடியில் நீர் தட்டுபாடு, நோய் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பைவிட இருக்கும் பெரும் சவால், வேகமான காற்றிலிருந்து வாழை மரங்களை காப்பதுதான். இதில்தான் விவசாயிகளுக்கு பெருத்த நட்டம் ஏற்படும்.

பருவக்காற்று வீசும் காலங்களில் கம்புகளால் முட்டுக் கொடுப்பது, மண் அணைப்பது, இலைகளை கவாத்து செய்வது, 'பிளாஸ்டிக் பெல்ட்'டால் கட்டுவது போன்றவற்றை செய்து வாழை மரங்களைக் காப்பது வழக்கம். இருப்பினும் 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசினால் மரங்கள் அடியோடு சாய்ந்து விடும். 

கடலோர பகுதிகளில் வீசும் காற்றைத் தடுக்கவும், கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புழுதியை தடுக்கவும் பொதுவாக சவுக்கு மரங்களை வளர்ப்பர். அதேமுறைப்படி வாழை மரத்தோப்புகளையும் காக்க எண்ணியே, வீரிய ரக சவுக்கு மரத்தை உருவாக்கியுள்ளார், கோவையில் உள்ள, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு ஆராய்ச்சியாளர் . புவனேஸ்வரன்.

வீரிய ரக சவுக்கு:

10க்கு மேற்பட்ட உயர் ரக சவுக்கு மரங்களிலிருந்து, மாதிரிகள் எடுக்கப்பட்டு, 'குளோனிங்' முறையில் தாவர இனப்பெருக்கம் முறையில், "காசுரினா ஜூங்குனியானா" என்ற வீரிய ரக சவுக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பயன், பயன்படுத்தும் முறை:

இந்த ரக சவுக்கை வாழைத்தோப்பின் நான்கு திசைகளின் ஓரத்திலும் மூன்று வரிசைகளாக ஒரு மீட்டர் இடைவெளியில் குறுக்கு மறுக்காக நட வேண்டும். இச்சவுக்கை வளர்ப்பதால், காற்றின் வேகத்தை 46 சதவீதமும், மண் அரிப்பை 76 சதவீதமும் கட்டுப்படுத்தலாம். மேலும் தோட்டத்தி தட்பவெப்ப நிலை சமன் ஆவதுடன், காற்றில் உள்ள தழைச்சத்தையும் மண்ணில் நிலைநிறுத்துகிறது. இச்சவுக்கு மரம் மூன்று ஆண்டுகளுக்கு பயன்படும். பின் சவுக்கு மரங்களை அறுவடை செய்வதின் மூலம் உபரி வருமானமும் கிடைக்கிறது.

தொடர்பு கொள்ள: 0422 - 2484100

**வாழைத்தோப்புகளைக் காக்க, வீரிய ரக சவுக்கு மரங்களைக் கண்டு பிடித்த மர ஆராய்ச்சியாளர் புவனேஸ்வரன் அவர்களை வாழ்த்துவோம், நண்பர்களே.