Tuesday, November 19, 2013

திறமைக்கு தடையில்லை - 1



சொர்க்கத்தில் முடிவென்று சொன்னவன் யாரடா

பக்கத்தில் அவன் இருந்தால் பறக்கும் பல்லடா

சாமானியன் என்பதின் அர்த்தம் தான் என்னடா

சாதிக்க நினைப்பவன் சறுக்கினால் சிரிப்போடா

சாமிக்குப் படைத்தால் பெய்திடும் மழையோடா

விதி செய்த சதி என்ற முழக்கத்தை அகற்றடா

அலைபோலே நீ எழுந்து வெற்றிக் கொடிநாட்டடா


நன்றி: Kannan Kannarasan

Saturday, November 16, 2013

உற்சாகப்படுத்துவோம் வாழ்த்துக்கள் கூறி.



மாற்றுத்திறனாளிகளுக்கான, தேசிய பாரா (ஒலிம்பிக்?)  நீச்சல் போட்டியில், திண்டுக்கல்லில் பயிற்சி பெற்ற தமிழக வீரர்கள்,  5 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

பெங்களூருவில், 13வது தேசிய பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில், 17 மாநிலங்களை சேர்ந்த 340 மாற்றுத்திறனாளிகள், மொத்தம் 176 பிரிவுகளில் பங்கேற்றனர்.

திண்டுக்கல்லில் பயிற்சி பெற்ற 15 மகளீர் உள்பட 39 பேர் பங்கேற்ற தமிழக அணியில், 13 பேர்,    5 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

சப்-ஜூனியர் மகளீர் பிரிவில் சென்னையை சேர்ந்த மயூரி, 3 தங்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். சீனியர் ஆண்கள் பிரிவில் தர்மபுரியை சேர்ந்த வெங்கடேசன் 2 தங்கம், 2வெள்ளி பதக்கங்கள் பெற்று சாம்பியனானார். மதுரையை சேர்ந்த பெருமாள் 2 வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் சென்ற ஆண்டு 7ஆம் இடத்திலிருந்த தமிழகம், 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.வெற்றிப் பெற்ற மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர்களை, தமிழ் நாடு அனைத்து  மாற்றுத்திறனாளிள் சார்பிலும் மேலும் ஊக்கத்துடன் செயல்பட்டு உலக பாரா ஒலிம்பிக்கிலும் சாதனைப்படைக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பதக்கங்கள் பெறாதவர்கள் தோல்வியாளர்கள் அல்ல. அடுத்த முறை சிறப்பான சாதனையாளர்களாக திகழவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நண்பர்களே! நீங்களும் வாழ்த்துங்களேன்.

# இதுவரை போட்டிகளைப் பற்றி அறியாத, அறிந்தும் கலந்துக் கொள்ளாத மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளே! உங்கள் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள். உங்கள் மாவட்ட சமுக நலத்துறையை அணுகி, உங்களை பதித்துக் கொள்ளுங்கள். வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும் வரை பயிற்சியைத் தொடருங்கள். வாழ்த்துக்கள்.  


Tuesday, November 12, 2013

உறுதியிருந்தால்....

ங்கள் வெற்றியால் சமுதாயத்துக்கு உணர்த்துவோம் - கார்மென்ட்ஸ் தொழிலில் கலக்கும் திருநங்கைகள்

திருநங்கைகள் என்றாலே ஏளனமாகத்தான் பார்க்கிறது இந்த சமூகம். வக்கிரப் பார்வை, பாலியல் தொல்லை, கேலி, கிண்டல், சமூக புறக்கணிப்பு என அத்தனை அவலங்களையும் சகித்துக்கொண்டு, இன்றைக்கு பல துறைகளிலும் திருநங்கைகள் சாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அப்படி சாதித்தவர்களுக்கு பாரதி கண்ணம்மாவும் பிரியா பாபுவும் நல்ல உதாரணங்கள்.

மதுரையின் புறநகர் பகுதியில் உள்ள நாகமலை புதுக்கோட்டையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது இவர்களின் ஆயத்த ஆடை (ரெடிமேட் கார்மென்ட்ஸ்) தயாரிப்பு மையம். அங்கே பாரதி கண்ணம்மாவையும் பிரியா பாபுவையும் சந்தித்தோம். முதலில் பாரதி கண்ணம்மா பேசினார்.

‘‘இந்த வருஷம் ஒன்பதாம் மாசம், ஒன்பதாம் தேதி இந்த கார்மென்ட்ஸ் சென்டரை ஆரம்பிச்சோம். என்ன.. எல்லாமே ஒன்பதா வருதேன்னு பார்க்குறீங்களா? தப்பா நெனச்சுடாதீங்க. அன்னைக்கு விநாயகர் சதுர்த்திங்கிறதால தொடங்கினோம்’’ இந்தச் சமூகம் தங்களுக்குச் சூட்டி வைத்திருக்கும் இழிவான பட்டப்பெயரை மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டி வருத்தப்பட்டதை உணர முடிந்தது. பாரதி கண்ணம்மா தொடர்ந்தார்..

எல்லாரும் திருநங்கைகளுக்கு ஆதரவாக இருக்க மாதிரி பேசுவாங்க. ஆனா வேலை கேட்டுப் போனா, யாரும் தர மாட்டாங்க. ‘உங்கள வேலைக்கு வச்சா, மத்தவங்க வரத் தயங்குவாங்க. உள்ள பொழப்பும் கெட்டுப் போயிரும்மா’ன்னு சொல்லி 500 ரூபாயை கையில குடுத்து அனுப்பி வைச்சிடுறாங்க.

சமுதாயம் நம்மள ஏத்துக்கணும்னா அவங்க விரும்புற துறையை நாம தேர்வு செய்யணும். அதனால தான் கார்மென்ட் தொழில்ல இறங்கிப் பார்க்கலாங்கிற ஐடியா தோணுச்சு. சில நல்ல உள்ளங்களோட உதவியால, கோவையில இருக்கற தைலா நிறுவனம் எங்களுக்கு தொழில் வாய்ப்பு தர முன் வந்தாங்க. இதுவரை கிட்டத்தட்ட ரூ.11 லட்சம் வரைக்கும் செலவு செஞ்சு இந்த ஆடை தயாரிப்பு மையத்தை உருவாக்கி இருக்கோம்.

ஆர்டர் பிடிக்கிறது, வரவு செலவு பார்க்கிறதுன்னு எல்லா வேலையும் திருநங்கைகள்தான் பண்றோம். டைலரிங் வேலைக்கு மட்டும் வெளியில இருந்து சில பெண்கள் வர்றாங்க. ஏன்னா.. ‘ஒரு வீதி சுத்திட்டு வந்தாலே ஐநூறூ ரூபா கிடைக்கும். ஆனா.. டைலரிங் வேலைய நாள் முழுசும் பார்த்தாலே முந்நூறு கூட சம்பாதிக்க முடியாது’ன்னு சொல்லி பல திருநங்கைகள் இந்த வேலைக்கு வரத் தயங்குறாங்க. எது கவுரமான வேலைன்னு அவங்களுக்கு இன்னும் தெரியாமலே இருக்கு.. என ஆதங்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பிரியாபாபு, ‘‘முதல் மாசம், எதிர்பார்த்தபடி எங்க இலக்கை எட்டிட்டோம். அதனால இங்க வேலை பார்த்தவங்களுக்கு வாரச் சம்பளத்தோட, தீபாவளி போனஸ்கூட போட்டிருக்கோம். ரெண்டாவது மாசத்துக்கு கூடுதலா மெட்டீரியல் கேட்டிருக்கோம். திருநங்கைகள் முயற்சித்தால் எதுவும் சாதிக்க முடியும் என்பதை இந்த கார்மென்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றி மூலம் சமுதாயத்துக்கு சொல்லி ஆகணும். அதுக்காவே கடுமையா உழைச்சிட்டு இருக்கோம். கூடிய சீக்கிரமே இதை பெரிய நிறுவனமா வளர்த்துக் காட்டுவோம்’’ என்றார்.

 தகவல்: Nagoorkani Kader Mohideen Basha - நன்றி.

Tuesday, November 5, 2013

ஓட்டுநரின் சோர்வை அளந்து அறிவுறுத்தும் கருவி! - தமிழக மாணவர்களின் சாதனை.




திருவள்ளூர்: ஓட்டுநரின் சோர்வை அளந்து, தேவைக்கேற்ப குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கும் கருவி ஒன்றை எஸ். ஏ பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்து உள்ளனர். தூக்கமின்றி தொடர்ந்து வண்டியோட்டுவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க உதவும் வகையில் இந்தக் கருவி தொடர்ந்து உணர்வலை(சென்சார்) மூலம் ஓட்டுநரின் அசதி, சோர்வு ஆகியவற்றை மதிப்பிட்டு எச்சரிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

எஸ். ஏ பொறியியல் கல்லூரி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த வீரராகவபுரத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி மாணவர்களான எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில் குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் தம் விரிவுரையாளர் ஹெச். அன்வர் பாஷாவின் வழிகாட்டுதலின்படி, இந்த, கண்ணிமை மாறுபாடுகளைக் கொண்டு ஓட்டுனரின் விழிப்புநிலையைக் கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இக்கருவி ஓட்டுநரின் கண்ணிமை மாறுபாடுகளைக் கணக்கில் கொண்டு அசதியை அளவிடுகிறது. மேலும், அந்நிலை குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது, வாகனத்திற்குரிய வரின் எண்ணுக்கு குறுஞ்செய்தி யொன்றையும், ஓட்டுநரின் அப்போதைய காணொளி ஒன்றையும் அனுப்பி வைக்கிறது. மேலும் ஜீபீஎஸ் எனப்படும் இடமறிதல் நுட்பம் மூலம் வாகனம் இருக்கும் இடத்தையும் காண்பித்துத் தருகிறது. பின்வருங்காலங்களில் வண்டியின் நிலை, வானிலை, ஓட்டுநரின் உடல்நிலை உள்ளிட்ட மற்றக் காரணிகளும் இதில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மாணவர்களின் இந்த வடிவமைப்பைக் கல்லூரித்தலைவர் டி. துரைசாமி, முதல்வர் சுயம்பழகனார் ஆகியோர் பாராட்டினர்


நன்றி:-· Keyem Dharmalingam