Thursday, August 22, 2013

தூங்காதே தம்பி தூங்காதே !!!


கார் ஓட்டுபவர்கள் தூங்கி விடாமல் தடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருவியை, ஜெர்மனி விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளார்கள். இந்த கருவியில் உள்ள கேமரா, ஓட்டுனரின் கண் அசைவுகளை வினாடிக்கு 200 முறை படம் பிடிக்கும் சக்திக் கொண்டது. எனவே இக்கருவியின் கணிப்பு துல்லியமானதாகவே இருக்கும். இந்த கருவிக்கு "ஐ டிராக்கர் " என பெயரிடப்பட்டுள்ளது.

எப்போதும் கவனித்துக் கொண்டேயிருக்கும், இக்கருவி ஓட்டுனர் தூங்குவது போல் தெரிந்தால், விழிப்புணர்வு அலாராமாகவோ, விளக்காகவோ இருக்கலாம்.அடுத்தடுத்து வரும் வாகனங்களுக்கும் இதனால் எச்சரிக்கை பெரும் வகையாகவும் இருக்கும். காரில் தூக்கக்கலக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையுமென அவ்விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


# எச்சரிக்கை விளக்குடன் அலாரமும் இணைந்திருந்தால் மேலும் அதிக பாதுகாப்பைத்தரும். கண்டுபிடித்துள்ள ஜெர்மனி விஞ்ஞானிகளை வாழ்த்துவோம்.

இன்றொரு தகவல் ! - திருமதி.மோஹனாம்மா ( Mohana Somasundram )




தமிழ்நாடு பழனியை சேர்ந்த கல்லூரிப் பேராசிரியையும், வானவியல் ஆய்வாளரும், எமது முகநூல் நண்பியுமான திருமதி.மோஹனாம்மா ( Mohana Somasundram ) அவர்களைப் பற்றி டாக்டர் விகடன் இதழிலும், காலைக்கதிர் நாளிதழிலும் செய்தி வாசித்ததும், அவருடனான சந்திப்பு நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ள தொடர்புக் கொண்டோம். அவரும் மிக்க மகிழ்வுடன் அளவுலாவினார். அவர் நலனும், பணியும் சிறக்க வாழ்த்துக் கூறி விடைப் பெற்றோம்.

Wednesday, August 21, 2013

வாழ்த்துவோம் !!!



பட்டதாரிகளுக்கான பி.எட்., தகுதித் தேர்வு ஆகஸ்ட் 18ந் நடந்தது. அதில் சேலம் கண்ணங்குறிச்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சரண்யா,
சென்ற முறை 84% மதிப்பெண்கள் பெற்றிருந்தபோதும் பணி கிடைக்காமையால், இம்முறை உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் பணியை பெறும் குறிக்கோளுடன் இரண்டாம் முறையாக தேர்வு எழுதியுள்ளார்.


விடாமுயற்சியுடன் போட்டித்தேர்வை எழுதியுள்ள மாற்றுத்திறனாளி சரண்யாவின் கனவு நினைவாகி சாதனைப் படைக்க வாழ்த்துவோம் நண்பர்களே.


Tuesday, August 20, 2013

பரந்த மனம் இவருக்கு - பேராசிரியர் பெரியார் தாசன்










சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் பெரியார் தாசன் நேற்று (19/08/2013 ) இறைவனடி அடைந்து விட்டார். அவருடைய விருப்பப்படி, அவருடைய கண்கள் சங்கர  நேந்திராலயாவுக்கும், உடல் சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக வழக்கப்பட்டது.

அவரின் உயர்ந்த எண்ணத்திற்கு தலை வணங்கி, ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். 
 







தள்ளாத வயதிலும் ஒரு சாதனை.



சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 25 ஆண்டுகளாக காது மூக்குத் தொண்டை நிபுணராக பணியாற்றிவரும் 88 வயதான டாக்டர் ராமதாஸ், இன்று சென்னை பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு  விழாவில் காஎன்னை து மூக்குத் தொண்டை சிறப்பு மருத்துவத்திற்கான பட்டத்தைப் பெறுகிறார்.

ஆந்திராவில் பிறந்த டாக்டர் ராமதாஸ், 1953ல் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பட்டமும், தொடர்ந்து காது மூக்குத் தொண்டை அறுவை சிகிச்சைத் துறையில் முதுகலைப் பட்டமும், இப்பிரிவிலேயே பட்டய படிப்பும் முடித்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் காது மூக்குத் தொண்டை பிரிவில் பணியாற்றியதுடன், அத்துறையின் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

வயதிலும், படிப்பிலும், பணியிலும் உயர்நிளையிலுள்ள டாக்டர் ராமதாஸ் நீண்ட ஆயுளுடன் நிலையான நலனுடனிருந்து பணி மென்மேலும் சிறந்து நீங்கா புகழடைய, நமது சார்பில் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

Tuesday, August 13, 2013

மூளைக்கு வேலை



சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அவரவருக்கு ஏற்ற வகையில் பல்வேறு புதிர்கள் விளையாட்டு போல மூளைக்கு வேலைக் கொடுத்து உற்சாகப்படுத்தும் முறையில் கணித ஆசிரியையாக பணியாற்றிய திருமதி சீதாலக்ஷ்மி அவர்கள் எளிதான வகையில் கீழ்காணும் இலவச இணையதளத்தை துவக்கியுள்ளார்.

இவர் பணியைப் பாராட்டும் விதமாக 'அமெரிக்கன் லைப்ரரி அசோசியேசன்' விருது வழங்கப்பட்டுள்ளது.

வலைதளத்திற்குக் கிடைத்த விருதுகளும் அங்கீகாரமும் :

அமெரிக்கநூலக விருதினையும், ஆஸ்திரேலிய கல்வித்துறையின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

http://www.gymnasiumforbrain.com/ala.htm

http://www.gymnasiumforbrain.com/edna.htm

மேலும் Education world என்ற வலைத்தளம் இத்தளத்திற்கு "A+" விருதினை வழங்கியுள்ளது. http://www.gymnasiumforbrain.com/educationworld.htm


இந்த இணையதளம் தமிழிலும் பார்வையிடும் வசதியுள்ளது. அவர் செயல்பாடுகள் மேலும் சிறந்து, புகழடைய வாழ்த்துவோம்.

In English: www.gymnasiumforbrain.com/english/ - இதன் மூலமாகவே தமிழுக்குறிய வாய்ப்பு உள்ளது.

தமிழில்: www.gymnasiumforbrain.com/tamil/

Dhavappudhalvan

Thursday, August 8, 2013

மனிதத் தேனி


வாழ்த்துவோமே "மனிதத் தேனி' சாந்தி சுப்பிரமணியம்" அவர்களை!!!!!!!
ஊக்கம் கொள்வோமே இவரைக் கண்டு....


திருமதி சாந்தி சுப்பிரமணியம் மற்றும் அவரது மாணவர் வேல்முருகன்

கிருஷ்ணகிரியில் இருந்து, வெறும் +2 முடித்த கையோடு, திருமணமாகி வந்தவர் சாந்தி சுப்ரமணியம்.
ஆலம் விதையாய் திருமண பந்தம் எனும் புதிய உலகத்துக்கு அடி எடுத்து வைத்தவர், இன்று விருட்சமாகி பல கண் தெரியாத மாணவர்களின் படிப்புக்கு, பேருதவிகளை செய்து அவர்களாலேயே இன்று 'மனிதத் தேனி' என்று புகழப்பட்டு வருகிறார்.

தற்போது சாந்தி சுப்ரமணியத்தின் உதவியோடு பி எட், மற்றும் மற்ற பட்டப்படிப்புகள் படித்துவிட்டு, வேலை பார்க்கும் கண் தெரியாதவர்கள் பல பேர். வெறும் +2 படித்து விட்டு உங்களால் இது எப்படி சாத்தியமானது என்று கேட்டபோது,

"+2 படிக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது, பிறகு கணவர், குழந்தைகள் என்று எனக்கு நேரம் சரியாக இருந்தது. எனக்கு டாக்டராக வேண்டும் என்று கனவு இருந்தது. அந்த கனவு சிதைந்து போனாலும், குடும்ப   வாழ்வில் நான் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். பிள்ளைகள் ஓரளவுக்கு வளர்ந்தவுடன், எனது நேரத்தை பயனுள்ளதாக செலவிட வேண்டும் என்று தோன்றி, மேற்கொண்டு படிக்க  முடிவு செய்தேன்" என்று கூறும் சாந்தி சுப்ரமணியம் படித்துப் பெற்று இருக்கும் பட்டங்கள் எத்தனை தெரியுமா?

எம்.காம், பி.எட், எம்.பில், பி.ஏ ஆங்கிலம், பி.ஜி.டிப்ளமோ இன் கைடன்ஸ் அன்ட் கவுன்சிலிங் என நீண்டு கொண்டு போகிறது. சரி, இத்தனை பட்டங்கள் பெற மொட்டிவேஷனாக அமைந்தது எது என்று இவரிடம் கேட்டால்..

"2000ம் ஆண்டு, எனக்கு ஒரு தோழி ரெகமண்ட் செய்தார்கள், அதாவது கண் தெரியாத மாணவர்கள் நிறைய பேர்  இருக்கிறார்கள். அவர்களுக்கு உன்னால் முடிந்த பாடங்களை வாசித்து காண்பித்து, தேவைப்பட்டால் ரெக்கார்ட் செய்து கொடு என்று அறிவுறுத்தினார்கள். அங்கு சென்ற பின்னர் நான் ஒரு புதிய உலகத்தைக் கண்டேன். அந்த பிரமிப்பில் நான் அடிக்கடி  அவர்களுடன் நேரத்தை கழிக்க ஆர்வமுடன் செல்வேன்.

அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா  என்பதைவிட, நான் அவர்களிடம் கண்ட ஆற்றலும், ஊக்கம் மிகுந்த இந்த தனி உலகமும் எனக்கு மிகவும் பயனுடையதாக இருந்தது.  நான் இவர்களை ஊக்குவித்து படிக்க சொல்வதும், அவர்கள் என்னை ஊக்குவித்து மேலும் மேலும் படிக்கத் தூண்டியதும் ஒரு தனி சுகமான அனுபவங்கள்.

நான் கரஸில் படித்து இப்படி அதிக பட்டங்கள் வாங்கியதில் அவர்களுக்கு அதிக பங்கு உண்டு. ஒரு கண் தெரியாதவருக்கு உதவி  செய்தேன், அவர்கள் பயனடைந்தார்கள் என பல பேர் சொல்லக் கேட்டு இருப்பீர்கள். ஆனால் அவர்களால் நாமும் பயனடைகிறோம் என்பதற்கு நான் ஒரு நல்ல உதாரணம். இது எனக்கு பெருமையாகவும் இருக்கிறது.

எனது ஜாதக யோகம் எனக்கு வேலைக்குப் போகும் தருணமே வாய்க்காதாம். ஆனால், எனக்கும் நான் படித்த படிப்பினால் எடுத்த எடுப்பில் வேலை கிடைத்தது. அதுவும் கல்லூரிப் பேராசிரியராக! என் பிள்ளைகள் சொல்வார்கள்.  'என்னம்மா, காலேஜ் என்றால் ஜாலியா சினிமாவில் காண்பது போல இருக்கும் என்று நினைத்தால்,  நோட்ஸ், ப்ராஜக்ட் என்று வதைக்கிறார்கள்' என்று.

'ஆனால், படிக்க கல்லூரி வாசலில் அடி எடுத்து வைக்காத நான், பேராசிரியராக அன்று கல்லூரிக்குள் அடி எடுத்து வைத்த நாள் இருக்கிறேதே. அடடா என்ன சுக அனுபவம் தெரியுமா! நான்  என் பிள்ளைகளிடம் சொன்னேன், நான்  போனதுதான் உண்மையில் சினிமா காலேஜ் என்று, அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. கல்லூரிக்கு  சென்று படிக்காத நான் கல்லூரி பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க போகிறேன்...எவ்வளவு இனிமையான அனுபவம் பாருங்கள்!'

'இந்த நிலைக்கு நான் வர காரணம் என்ன? ஒரு நாள் ஒரு கண் தெரியாத மாணவரிடம் என்னுடன் வந்து இருந்த ஒரு பெண்மணி கேட்டார். தம்பி, நீ என்னவாகப் போகிறாய் என்று. அதற்கு அந்த மாணவர் நான் ஐ ஏ எஸ் ஆகணும் மேடம் என்றார். கண் தெரியாத உன்னால் எந்த அளவுக்கு படித்து ஐ ஏ எஸ் ஆக முடியும் என்று நினைக்கிறாய் என்று அந்த பெண்மணி கேட்டார்.'

'அதற்கு அந்த மாணவர் சொல்லிய பதில்தான் என்னை இத்தனை பட்டங்கள் வாங்கத் தூண்டியது. அந்த மாணவர், உங்களுக்கும், எங்களுக்கும்  என்ன பெரிய வித்தியாம் மேடம்? நீங்கள் பார்த்து படிப்பதை நாங்கள் கேட்டு படிக்கிறோம். அவ்வளவுதானே? எங்களால் ஏன் ஐ ஏ எஸ் ஆக முடியாது என்று கேட்டார். எனக்கு அப்படியே புல்லரித்துப் போனது. அவர்களிடம் இப்படி நான் நிறைய கற்றுக் கொண்டதன் விளைவே, இப்போது நான் படித்து வாங்கிய பட்டங்கள்.'

என்னை, இந்த கண் தெரியாத மாணவர்கள் நன்றாக  ஊக்குவிப்பார்கள். அவர்கள்தான், தமிழக அரசின் ஆசியர் தகுதித்  தேர்வு எழுத சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார்கள். அப்போதுதான் ஆசிரியர் தகுதிக்கான முதல் தகுதித் தேர்வு ஆரம்பமானது. நான் இந்த மாணவர்களிடம் குரூப் ஸ்டடி  செய்து பாஸ் பண்ணி, இப்போது அம்பத்தூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் +1,+2 வகுப்பு எடுக்கிறேன். எங்கள் வீட்டில் நான் எனது பிள்ளைகள் தினேஷ் குமார், விக்னேஷ் குமார், என்று மூவரும் படித்தோம். எனக்குத்தான் முதலில் வேலை கிடைத்தது. அடுத்து எனது பிள்ளைகள் இருவருக்கும் வேலை கிடைத்தது.

இது போன்ற வித்தியாசமான மகிழ்வான தருணங்கள் எத்தனை குடும்பத்தில் நடக்கும்? இந்த வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்க காரணமாக இருந்தது, நான் கண் தெரியாத மாணவர்களுடன் பழக ஆரம்பித்த போதுதான். உண்மையில் அவர்களுக்கு நான் என்ன கற்றுக் கொடுத்தேன் என்று தெரியாது. அவர்களிடம் நான்  நிறைய கற்றுக் கொண்டு முன்னேறியுள்ளேன்." என்று மீண்டும் மீண்டும் பெருமையுடன் சொல்கிறார் சாந்தி சுப்ரமணியம்.

அவர் வீட்டுக்கு அவரைக் காண சென்ற போது, வந்திருந்த கண் தெரியாத மாணவர் வேல்முருகன், "சாந்தி சுப்ரமணியம் மேடம் இல்லை என்றால், நான் இந்த அளவுக்கு படித்திருக்க முடியாது. இப்போது எஸ் ஆர் எம் கல்லூரியில் இலவசமாக பி எட் படிக்க சீட் கிடைத்துள்ளது. இதற்கும் எனக்கு படிக்க, சாட் வரைய மேடம்தான் உதவி செய்வார்கள். மேடம் அத்தனை சுறுசுறுப்பு. நாங்கள் 'மனிதத் தேனி' என்று பெயர் வைத்துள்ளோம். மேடம் படிப்பில் மட்டுமல்லாது, என்னுடைய கபடி விளையாட்டு, ஓவியம் வரையும் திறமை அனைத்தையும் ஒரு அம்மா மாதிரி இருந்து ஊக்குவிப்பார்கள்" என்று நெகிழ்வுடன் கூறுகிறார்.
- 4தமிழ்மீடியாவுக்காக எழில்செல்வி, படங்கள் சூர்யா
 எழில் செல்வியின் இக்கட்டுரைகளையும் வாசித்துச் செல்க :



http://www.4tamilmedia.com/knowledge/essays/16089-2013-08-01-09-53-21


Thanks to:  4தமிழ்மீடியா

Wednesday, August 7, 2013

இன்றொரு தகவல் - சொல்வோம் வாழ்த்துக்களை.



.Mrs.vijayalakshmi  madurai




14 மாஸ்டர் டிகிரி, முன்று எம்.பில்., இரண்டு பி.ஹெச்டி. பெற்றதுடன், 64 சாஃப்ட்வேர்களை தயாரித்த, மதுரையின் முதல் பெண் கணினி மென்பொருள் ஏற்றுமதியாலரான திருமதி. விஜயலட்சுமி அவர்களை முதலில் வாழ்த்துவோம்.

காதல் கணவரை 25 வயதிலேயே கணவரை இழந்தபோது கம்பியூட்டர் இன்ஜினியரிங் படித்திருந்ததால், தனது குழந்தைகளுக்காக தற்கொலை முடிவை கைவிட்டு, வங்கியில் 25 இலட்சம் ரூபாய் கடன் பெற்று, 12 ஊழியர்களுடன் வீட்டிலேயே, சிறிய சாஃப்ட்வேர் நிறுவனத்தை ஆரம்பித்தவர், கடுமையான உழைப்பினால் இன்று 400 ஊழியர்களுடன் மதுரை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் என நான்கு கிளைகளாக வளர்ந்துள்ளது.

கிராமத்து இன்ஜினியரிங் மாணவர்கள் கணினி தொடர்பாக படித்திருந்ததாலும், தொழில் ரீதியான திறனை வளர்த்துக் கொள்ளாததால், படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தடுமாறுகின்றனர். எனவே நான் பெற்ற நன்மைகளுக்கு பிரதிபலனாக, "வெப்டெவலெப்பிங்" பயிற்சியை இலவசமாக கற்று   தந்து, 'மைக்ரோசாஃப்ட்' துணையுடன் 'ஆன்-லைன்' தேர்வு நடத்துகிறேன்.

இத்தேர்வு முடிவுகள், மைக்ரோசாஃப்டின் இணையதளத்திலேயே வெளிவருவதால், வென்றவர்களுக்கு உலகின் முக்கிய எம்.என்.சி.,கம்பெனிகளிலேயே இலட்ச கணக்கில் சம்பாரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. வெளியிடங்களில் இப்பயிற்சிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வசூலிக்கின்றனர். இங்கு இலவசமாகவே.

ஆண்டுக்கு 200 கிராம  மாணவர்கள் வீதம், இரண்டு ஆண்டுகளாக பயிற்சி அளிக்கிறேன்.இதுவரை யாரும் தோல்வி அடையவில்லை. மேலும் விதவை பெண்களுக்கு கணினி பயிற்சி, டெக்னிகல் டிரைனிங், மன உறுதியை வளர்க்க கவுன்சலிங் போன்றவற்றை வழங்கி வழிக்காட்டுகிறேன்.

சாஃப்ட்வேர் துறையில் வெற்றி பெற்றமைக்காக, சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதை, மத்திய, மாநில அரசுகளிடமிருந்தும், இங்கிலாந்தின் 'விமன் ஆஃப் தி இயர்' விருதும் பெற்றிருக்கிறேன் என தெரிவித்திருக்கும் திருமதி.விஜயலட்சுமி அவர்களை மீண்டும் வாழ்த்துவோம்.

தொடர்புக்கு : 98421 74800

Monday, August 5, 2013

மாற்றுத்திறனாளி பெண், உலக செஸ் சாம்பியனை வாழ்த்துவோம்.



உலக பெண்கள் தனி நபர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஜெனிதா அந்தோ சாம்பியன் பட்டம் வென்றதற்காக, இந்திய அரசின் சார்பில் பாராளுமன்றத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலாளர்கள், தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் எமது சார்பிலும், அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

* எந்த வருடத்தில், எங்கே, வெற்றிப் பெற்றார் என்பதோ, அவரின் புகைப்படமோ கிடைக்கவில்லை. அறியும் நண்பர்கள் எமக்கு தகவல் கொடுத்துதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.